''இஸ்ரேல் என்னை கொலை செய்ய முயற்சித்தது, நூலிழையில் தப்பினேன்.." : ஈரான் ஜனாதிபதி அதிர்ச்சி தகவல்



12 நாட்கள் போரின் போது இஸ்ரேல் இராணுவம் தன்னை கொல்ல முயன்றதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியான் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம், ஈரான் மீது இஸ்ரேல் வான்வழியாக தாக்குதலை நடத்தியது. 12 நாட்கள் நிகழ்ந்த இந்த போரின் போது, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கி, ஈரானில் உள்ள 3 அணுசக்தி மையங்கள் மீது தாக்குதலை நடத்தியது.

 அதன் பின்னர், ஈரான், இஸ்ரேல் நாடுகள் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ள 12 நாட்கள் போர் முடிவுக்கு வந்தது.
இந் நிலையில் போர்ச் சூழலின் போது இஸ்ரேல் இராணுவம் தன்னை கொல்ல முயற்சித்ததாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியான் அதிரடியாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

பிரபல அமெரிக்க ஊடகவியலாளர் டக்கர் கார்ல்சன், மசூத் பெசெஸ்கியானிடம் வினவிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
 

தாம் ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த பகுதியில் குண்டு வீசி இஸ்ரேல் தன்னைக் கொல்ல முயன்றதாக ஈரானிய ஜனாதிபதி கூறியுள்ளார்.. ஆனால் அதில் தோல்வியே கிடைத்தது. என் உயிருக்கு குறி வைத்தது அமெரிக்கா இல்லை, இஸ்ரேல் தான் என தெரிவித்துள்ளார்.

"நாங்கள் இந்தப் போரைத் தொடங்கவில்லை, இந்தப் போர் எந்த வகையிலும் தொடர விரும்பவில்லை."

அமெரிக்காவுடன் நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்ட முடிந்தால், அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதில் தனது நாட்டிற்கு "எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று பெஷேஷ்கியன் கூறினார். "பேச்சுவார்த்தைகளில் மீண்டும் நுழைவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை," என்று அவர் தெரிவித்தார்.

அத்துடன் ட்ரம்பை படுகொலை செய்யும் பிரச்சாரத்தில் ஈரான் ஈடுபட்டிருந்ததையும் அவர் மறுத்தார்.

இதேவேளை ஈரான் ஆன்மிக தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொல்வோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படையாக தெரிவித்திருந்த போதிலும் ஈரான் ஜனாதிபதி தொடர்பில் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.